28032024Thu
Last update:Mon, 04 Mar 2024

பிரிட்டன் முழுமையாக விலகிய பின்பே புதிய வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

18b6dd 01072016 kaaபிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முழுமையாக விலகிய பிறகே, புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க முடியுமென ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் சிசிலியா மம்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.

முதலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, அடுத்து, புதிய உறவு ஆகிய இரு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படிதான் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மம்ஸ்ட்ரோம் தெரிவித்தார்.

சமீபத்தில் கனடாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய ஏழு ஆண்டுகள் ஆனதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற விதி எண் 50-ன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவது, பிரிட்டனுக்கு மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

உலக வர்த்தக அமைப்பின் விதிகளின்படி வர்த்தக நடவடிக்கைகளை பல ஆண்டுகள் மேற்கொள்வது பிரிட்டனின் சேவைத் துறைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலைகள் வெளியிடப்படுகின்றன.